திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை அடுத்த முதலிபாளையம் சிட்கோ செந்தில்நகரை சேர்ந்தவர் அப்புக்குட்டி. இவருடைய மகன் பாலசுப்பிரமணியம் (வயது 31). நிதி நிறுவன அதிபர். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இவருடைய மனைவி, கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து பாலசுப்பிரமணியம் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பழனி முருகன் கோவிலுக்கு பாலசுப்பிரமணியத்தின் தாயும், தந்தையும் சென்றுவிட்டனர்.

இதனால் பாலசுப்பிரமணியம் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்த நிலையில் பாலசுப்பிரமணியத்தின் பெற்றோர் நேற்று காலை கோவிலில் இருந்து வீடு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பாலசுப்பிரமணியம் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். பாலசுப்பிரமணியத்தின் உடலில் கத்தியாலும், அரிவாளாலும் வெட்டப்பட்ட காயங்கள் இருந்தன. இதனை பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர்.

இது குறித்து ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு வந்து விசாரணை செய்தனர். போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த மோப்பநாய் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விபிடிக்கவில்லை. அதைத்தொடர்ந்து தடய அறிவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். பின்னர் பாலசுப்பிரமணியத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலைச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கொலை செய்யப்பட்ட பாலசுப்பிரமணியத்தின் வீட்டில் இருந்து பொருட்கள் எதுவும் திருட்டுபோக வில்லை. பீரோவில் இருந்த நகை, பணம் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் பத்திரமாக இருந்தன. எனவே பாலசுப்பிரமணியத்தின் வீட்டிற்குள் புகுந்த கொலையாளிகள் நகை, பணம், ஆவணங்களை திருடி ெசல்ல வரவில்லை என்பதும், பாலசுப்பிரமணியத்தை தீர்த்து கட்டவே வந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் கொலையாளிகளின் உருவம் பதிவாகி உள்ளதா என்று ஆய்வு செய்து வருகிறார்கள். பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக யாராவது பாலசுப்பிரமணியத்தை கொலை செய்தனரா அல்லது தொழில் போட்டியில் கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *