நாகப்பட்டிணம்:

நாகப்பட்டிணம் மாவட்டம், வெளிப்பாளையத்தை அடுத்த நம்பியார் நகர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் வெற்றிச்செல்வம். மீன்பிடித் தொழில் செய்து வரும் இவர், கடந்த 2019 ஆண்டு வீட்டில் தனியாக இருந்த அதே பகுதியைச் சேர்ந்த 8 வயதுடைய சிறுமியிடம், கைப்பேசியில் பதிவு செய்து வைத்திருந்த சில ஆபாச படங்களைக் காட்டி, பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட அந்த சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், நாகை அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீஸார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து வெற்றிச்செல்வத்தை கைது செய்தனர். இந்த வழக்கு நாகை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நாகை மாவட்ட போக்சோ நீதிமன்ற சிறப்பு அமர்வு நீதிபதி தமிழரசி, சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த குற்றத்துக்காக வெற்றிச்செல்வத்துக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும், பாலியல் தாக்குதல் செய்த குற்றத்துக்காக 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 25ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். சிறை தண்டனைகளை ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் எனவும் அபராதத் தொகைகளை கட்டத் தவறினால் மேலும் ஒன்றரை ஆண்டுகள் மெய்க்காவல் தண்டனை வழங்கியும் தீர்ப்பு வழங்கினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார். இதைத் தொடந்து வெற்றிச்செல்வம் போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறை சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *