சேலம்:

மேட்டூரை அடுத்த தங்கமாபுரிபட்டணம் பகுதியை சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன். இவரது மனைவி கஸ்தூரி (30). இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 8 மாதமாக பிரிந்து வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மேச்சேரியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வரும் மேட்டூரை அடுத்த மாதநாயக்கன்பட்டியை சேர்ந்த செல்வராஜ் (35) என்பவருக்கும் கஸ்தூரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் செல்வராஜ் வேறு விதமாக கஸ்தூரியிடம் பேச தொடங்கினார். அவரது நடத்தை சரியில்லாததால் கஸ்தூரி அவருடன் பேசுவதை நிறுத்தி விட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த செல்வராஜ், நேற்று இரவு கஸ்தூரி வீட்டுக்குள் திடீரென நுழைந்து கஸ்தூரியிடம் என்னிடம் பழகுவதை ஏன் நிறுத்தினாய்? என கேட்டு தகராறு செய்தார். தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த செல்வராஜ், கஸ்தூரியை அரிவாளால் தோள்பட்டை உட்பட பல இடங்களில் வெட்டினார்.

இதில் கஸ்தூரி பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து செல்வராஜ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். கஸ்தூரியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு முதல் உதவி சிகிச்சை பெற்ற கஸ்தூரி மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து கருமலைக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான செல்வராஜை தேடி வருகிறார்கள்.

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *